பார்வையாளர்களை குஷிப்படுத்தும் மலைப்பாம்பு

அமெரிக்காவின் மிசூரி மாகாணம் கன்சாஸ் நகரத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில் மிருகக்காட்சி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற மிருகக்காட்சி சாலைகளைவிட வித்தியாசமானது. அடர்ந்த வனப்பகுதியிலோ அல்லது கிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட
இடத்திலோ இல்லாமல் மிகப்பெரிய பங்களாவில் செயல்பட்டு வருகிறது. அரியவகை விலங்குகள் சில இந்த பங்களாவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு வளர்க்கப்படும் விலங்குகளில் ரொம்பவும் ஸ்பெஷல் எது தெரியுமா? மெதுஷா என பெயரிடப்பட்டுள்ள பிரம்மாண்டமான மலைப்பாம்புதான். இதன் நீளம் 25 அடி எடை 136 கிலோ. இந்த மலைப்பாம்பை தூக்குவதற்கு குறைந்தது 15 நபர்களாவது வேண்டும். மலைப்பாம்பு என்றதும் பீதி அடையத்தேவையில்லை. மான், முயல் போன்ற விலங்குகளைப்போல் மிகவும் சாதுவான குணம் உடையதாக மெதுஷா பாம்பு வளர்க்கப்பட்டுள்ளது. இதனால் இதைக்காணவரும் பார்வையாளர்கள் எந்தவித பயமும் இல்லாமல் அதனருகே அமர்ந்தும் அதை தங்கள் மடியில் தூக்கிவைத்தும் புகைப்படத்திற்கு உற்சாகமான போஸ் கொடுக்கின்றனர். முயல், மான், பன்றி போன்றவைதான் இதன் உணவு. 40 கிலோ எடையுள்ள விலங்குகளை சர்வ சாதாரணமாக தின்றுத்தீர்க்கிறது இந்த பாம்பு. இதற்கு பயிற்சி அளித்து பராமரித்துவரும் லாரி எல்கார் நெதுஷா கூறியதாவது இது 24 அங்குல நீளமுடைய குட்டியாக இருக்கும்போது இங்கு கொண்டுவரப்பட்டது. தற்போது அதற்கு 8 வயதாகிறது. அதன் நீளம் 25அடி. வயது அதிகரிக்க அதிகரிக்க அதன் நீளமும் எடையும் மேலும் அதிகரிக்கும். பொதுவாக மலைப்பாம்புகள் மனிதர்களையும் உண்ணும். இதனால் துவக்கத்தில் நான்கூட மெதுஷாவிற்கு அருகில் செல்லபயந்தேன். தற்போது சாதுவான ஜந்து ஆகிவிட்டதால் பார்வையாளர்கள் அதை செல்லமாக கொஞ்சுகின்றனர். உலகில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள உயிருள்ள மலைப்பாம்புகளில் மிக நீளமானது என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் மெதுஷா இடம்பெறப்போவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
நன்றி. எம்பிளாய்மென்ட் சர்வீஸ் அக்31 நவ 6 2012