மூலிகை செடிகளும் அதன் பயன்களும்

தொட்டாற்சுருங்கி

காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்கள் தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 

தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி. தெய்வீக மூலிகை ‘நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது. தெய்வீக மூலிகையான இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் ‘காமவர்த்தினி' என்றும் கூறுவர். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கம் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும். சிறுநீர் கல் கரையும் தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும். ஆண்மை பெருகும் ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். மூலநோய் நீங்கும் இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும்.
 

*************************************************************************

                                                        ஆவாரை
தாவரவியல் பெயர் Cassia auriculata Linn
அமைப்பு
நன்கு வளரும் செடி பட்டை காவி நிறமுடையது. துவர்ப்பானது. பூக்கள் பொன்னிறம் உடையது. காய்கள் செம்பு நிறமுடையவை. தட்டையானவை.


பயன்படும் பாகம்
முழுச்செடி (பஞ்சாங்கம்)
மருத்துவப்பயன்
இலை, பூ, வித்து, பட்டை, வேர் இவைகளைத் தனித்தனியாக ஒன்றிரண்டாக இடித்துச் சேர்த்து கசாயம் போட்டுக்குடித்துவர நீரிழிவு நோய் குணமாகிறது. இதனை ஆறாத புண்களுக்கும், எலும்புச்சுரத்திற்கும் கொடுக்க நல்லபலன் கிடைக்கும். இலை மற்றும் பூவை பச்சையாக அரைத்து தேய்த்துக்குளிக்க வெப்பம் தணிகிறது. சரும நோய்கள் அணுகாது. அம்மை நோய் உள்ளவர்களுக்கு இலையைக்கொண்டு வருட நமைச்சல் குறைகிறது. பட்டையை கசாயம் செய்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண், வாய் துர்நாற்றம் குணமாகிறது. பற்கள் பலப்படுகிறது. பட்டையில் அதிக அளவு டானின் சத்துள்ளது.
கிடைக்குமிடம்
வெற்றுத்தரிசு நிலங்களில் தானாக வளர்ந்திருக்கும்.

 *********************************************************************************

கறிவேப்பிலை
அமைப்பு
சிறிய மரம். இலை மிகவும் பசுமையானது. பூக்கள் வெள்ளை நிறம் கொண்டது. காய்கள் பழுத்தால் கருநீலமாகும். இலைக்கு நல்ல வாசனை உண்டு.
பயன்படும் பாகம்: இலை


 

மருத்துவப்பயன்
இலையை குழம்புகள் மற்றும் தாளிசம் செய்ய பயன்படுத்துகிறோம். இலையை சீரகத்துடன் சேர்த்து அரைத்து ஒரு நெல்லிக்காயளவு மோரில் கலக்கி குடித்தால் அசீரணத்தால் உண்டாகும் பேதி சீதபேதி உடனே கட்டுப்படுகிறது. இலையை பொடித்து சோற்றில் கலந்து சாப்பிட்டு வர கொழுப்புச்சத்து உடலில் மிகாது. இதனால் அதிக இரத்த அழுத்தம் ஏற்படாது. இவ்விலையுடன் மருதோன்றி இலையைச் சேர்த்து எண்ணெய் காய்ச்சி தலைமுழுகிவர தலைமுடிகள் உதிர்வது நிற்கிறது.
கிடைக்குமிடம்
சாதாரணமாக வீட்டுத்தோட்டத்தில் இலைக்காக வளர்க்கப்படுகிறது. தோட்டப்பயிராகவும் சில இடங்களில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. விதைகளை நடவு செய்து கன்றுகள் உற்பத்தி செய்யவேண்டும்.



  

அறுகம்புல் மருத்துவப்பயன்


அறுகம்புல்லின் தாவரவியல் பெயர் Cynodon dactylon 
இது ஒரு படரும் புல் வகையைச்சார்ந்தது. வேர்கள் ஆழமாகச்செல்லும் தாள் (இலை) சொரசொரப்பானதுசுத்தம் செய்த அறுகம்புல்லை இடித்துப் பிழிந்தச்சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்துவர சிறுநீர் நன்றாகக் கழிகிறது. உடல் வீக்கம் குறைகிறது. வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. இரத்தம் சுத்தியடைகிறது. அறுகம்புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்துத் தைலமாகக் காய்ச்சி ஆறாத விரணங்கள் படை சிரங்கு வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டுப்போட அவைகள் விரைவில் குணமாகிறது. வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்துவர பெண்களுக்கு ஏற்படும் சூதகக்கசிவு நீங்குகிறது. மனச்சோர்வு தூக்கமின்மை வலிப்புக்கும் அறுகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.  


**********************************************************************************
                                               பூனை வணங்கி
    சாதாரணமாக விலங்குகள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலிகைக்கு கட்டுப்பட்டு நிற்கும். மதம் கொண்ட யானை முதல் சாதுவான பூனை வரை இதற்கு விதிவிலக்கல்ல. கொடூரமான புலி, சிங்கம் உட்பட பல மிருகங்களும் தங்கள் உடலை வளைத்து நெளித்து சமன் செய்து கொள்ளும். புலி போன்ற தோற்றம் உடைய பூனை மிகுந்த சாதுவான மிருகம். ஆனாலும் எவ்வளவு பழகினாலும் சில நேரங்களில் சீறும் குணம் கொண்டது. அதனை கட்டுப்படுத்தும் மூலிகைதான் பூனை வணங்கி. இந்த மூலிகை அருகே பூனை செல்லாது.
    தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளரும். முக்கோண வடிவ இலை ஓரங்களில் அரும்பு அரும்பாக இருக்கும். சிறு செடியான இதன் இலை. இடுக்குகளில் வெண்மை நிறப்பூக்களும், மிளகு அளவிலான காய்களும் இருக்கும். அதிமஞ்சரி, அண்டகம், அக்கினி சிவன், பூனை வணங்கி, அனந்தம் என பல்வேறு பெயர்களில் இந்த மூலிகைச்செடி அழைக்கப்படுகிறது.
    இந்த மூலிகை செடியின் கீரையை (இலை) ஆமணக்கு எண்ணெய்யில் தாளித்து 48 நாட்கள் தொடர்ந்து சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்வு தொடர்பான பல்வேறு நோய்களும் நம்மை விட்டு போகும். இதன் சாற்றை எடுத்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 தேக்கரண்டி அளவு கொடுத்தால் வயிற்றை கழியச்செய்து கோழையை அகற்றி வயிற்றில் உள்ள புழுக்களை கொல்லும். மாந்திரீக மூலிகையான இது அனைவரையும் வசீகரப்படுத்தும். கோழை நீக்குதல், இருமலை கட்டுப்படுத்துதல், விஷக்கடி, ரத்தமூலம், வாதம், நமைச்சல், ஆஸ்துமா, குடல்புழுக்கள், மூட்டுவலி, தலைவலி, மலமிளக்கி என பலவற்றுக்கும் நிவாரணியாக இந்த இலை உள்ளது. இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டினால் படுக்கை புண்கள் ஆறும். இதன் இலையில் மஞ்சள் மற்றும் கல் உப்பு கலந்து அரைத்து போட்டால் அனைத்து வகை சொறி சிரங்குகளும் தீரும். வேருடன் செடியை பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 முதல் 5 கிராம் வரை பசு நெய்யில் கலந்து காலை மாலை வேளைகளில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் 18 வகையான மூலம் தீரும். மோரில் கலந்தும் குடிக்கலாம். இந்த மருந்தை சாப்பிடும்போது புளி, காரம் போன்றவற்றை சமையலில் நீக்கினால் சிறப்பான பலன் கிடைக்கும். வேர் சூரணம் 1 பிடி இலை ஆகியவற்றை 1 லிட்டர் நீரில் போட்டு 8 ல் ஒரு பங்காக காய்ச்சி குடித்தால் கீரி பூச்சி, நாடாப்புழு, நாக்குப்பூச்சி நீங்கும். பேதியாகும் தன்மை கொண்டது. எனவே சிறுவர்களுக்கு பாதியளவு கொடுக்கவேண்டும். இலை சாற்றில் உப்பு, சுண்ணாம்பு கலந்து ஆமணக்கு எண்ணெய்யுடன் தடவினால் மேகப்புண் ஆறும். இலை பொடியை மூக்குப்பொடி போல் போட்டுக்கொண்டால் தலைவலி தீரும். முழு செடியையும் காய வைத்து சூரணம் செய்து சிட்டிகை அளவு காலை மாலை ஒரு மண்டலம் (48 நாள்) சாப்பிட்டால் பவித்தரம் தீரும். முழங்கால் வலி இருந்தால் இதன் வேரை அரைத்து அதனுடன் சமஅளவு சுண்ணாம்பு, வசம்பு, கருப்பட்டி சேர்த்து பற்று போட்டு வந்தால் வலி பறந்து போகும். இத்தகைய சிறப்புகளை கொண்ட பூனை வணங்கியை எங்கே போய் தேடுவது?
    


    பூனை வணங்கி என்றால் எந்த செடி? என எண்ணி குழம்ப வேண்டாம். எங்கும் பரவிக்கிடக்கும் குப்பைமேனி செடிதான் அது. முன்னோர் கண்டறிந்து கூறிய குப்பைமேனியை பயன்படுத்தி குப்பையாக மாறும் மேனியை பயனுடையதாக்கி நலமுடன் வாழ்வோம்.
நன்றி: தினகரன்

***********************************************************************************

துளசி

* துளசி இலைகளை, வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டால், பூச்சி, வண்டுக்கடி காரணமாக ஏற்படும் விஷம் மாறும்.



* துளசி இலைகளை காய வைத்து இடித்து, தயார் செய்த கஷாயத்துடன், தேன், பசுவின் பால் கலந்து உண்டால், கணையச் சூடு அகலும்.


* துளசி சாற்றில், சம அளவு தேன் கலந்து, ஐந்து நாட்கள் உட்கொள்ள, வாயு தொடர்பாக ஏற்படும் நோய்கள் குணமாகு
ம்
******************************************************************************