கருத்தரிக்கும் மகளிர் தெரிந்து கொள்ள வேண்டியவை

பேறு கால அபாய அறிகுறிகளும் அவசர சிகிச்சைகளும்

    கர்ப்பத்தின் முதல் 3 மாதங்கள் எப்படி கவனமாகக் கையாளப்பட வேண்டுமோ அதே கவனம் கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களிலும் மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக 8 வது மாதத்தில் இருந்து கர்ப்பிணிகளின் உடலில் நிகழ்கிற சின்னச்சின்ன மாற்றங்கள் கூட பெரிய பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் உடனடி மருத்துவ ஆலோசனையும், கவனிப்பும் அவசியம்.


    கர்ப்பத்தின் இறுதி மாதங்களில் ஏற்படுகிற அபாய அறிகுறிகளைப்பற்றியும், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் பற்றிக்கூறுகிறார் மருத்துவர் நிவேதிதா.
    கர்ப்ப காலத்தில் பெண்ணின் எடையானது மாதத்திற்கு 1.5 கிலோ வரை கூடலாம். ஆனால்  அந்த எடையானது ஒரே வாரத்தில் அதிகரித்தால் அது எச்சரிக்கை மணி. அந்தப்பெண்ணின் உடலில் உப்புச்சத்து கூடியதன் அறிகுறியாக இருக்கலாம். ப்ரெக்னன்சி இன்டியூஸ்ட் ஹைப்பர் டென்ஷன் எனப்படுகிற கர்ப்ப கால ரத்த அழுத்தம் தாக்கலாம்.
    கர்ப்பிணிகளுக்கு கடைசிú மாதங்களில் கால்களில் வீக்கம் தென்படுவது இயல்பானதே. ஆனால் அதுவே காலையில் எழுந்ததும் கால்களில் வீக்கம் தெரிந்தாலோ முகம் வீங்கி இருந்தாலோ அலட்சியப்படுத்தக்கூடாது. அது சிறுநீரகங்களில் உப்பு சேர்ந்ததற்கான அறிகுறியாக இருக்கக்கூடும் என்பதால் உடனே மருத்துவரை ஆலோசிக்கவேண்டும்.
    சில கர்ப்பிணிகளுக்கு அடி வயிற்றில் கூர்மையான வலி ஏற்படும். தாங்கவே முடியாத அந்த வலியினால் கர்ப்பப்பையே கல் மாதிரி இறுகின உணர்வு இருக்கும். நஞ்சு பிரிவதற்கான ஆரம்ப அறிகுறியாகவும் அது இருக்கலாம் என்பதால் அவசரமான மருத்துவப் பரிசோதனை அவசியம்.
    பிரசவத்திற்கு முன்பே மார்பகங்களில் பால் சுரப்பது அல்லது வேறு ஏதேனும் திரவக்கசிவு இருந்தால் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதற்கான அறிகுறியாகவோ ரத்த ஓட்டம் குறைந்ததற்கான அறிகுறியாகவோ இருக்கக்கூடும் என்பதால் இதுவும் உடனே கவனிக்கப்படவேண்டும்.
    வயிறு விரிய விரிய கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் அரிப்பு ஏற்படுவதும் இயல்பான ஒன்று ஆனால் உடல் முழுக்க வித்தியாசமான அரிப்பு இருந்தால் அது குழந்தையின் கல்லீரல் செயல்பாடு குறைவதற்கான அறிகுறியாக இருக்கலாம். சாதாரண அரிப்பு தானே என அலட்சியப்படுத்தினால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்துபோகலாம்.
    காரணமே இல்லாமல் திடீரெனத் தோன்றும் தலைவலி கண் மங்கலாவது வாந்தி மேல்வயிற்று வலி போன்றவையும் வலிப்பு வருவதற்கு முன்பான அறிகுறியாக இருக்கலாம் என்பதால் அவசரமாக கவனிக்கப்பட வேண்டியவை.
    சிலருக்கு உடலில் வேறு எங்கும் வலி இருக்காது. முதுகுத்தண்டுவடத்தில் மட்டும் வலிக்கும். அதுவும் நஞ்சு பிரிவதன் முதல் அறிகுறியாக இருக்கக்கூடும் என்பதால் மருத்துவரிடம் விரையவேண்டும்.
    கணுக்கால்களில் வலி நரம்பு சுருட்டி இழுத்தல் போன்றவை தீவிரமானாலும் மருத்துவரை பார்க்கவேண்டும்.
    சில கர்ப்பிணிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் தெரியும். பிரசவம் நெருங்கும்போது அப்படித்தான் இருக்கும் என அலட்சியம் காட்டாமல் அதையும் அவசர கால சிகிச்சையாக கவனத்தில் கொண்டு மருத்துவ ஆலோசனையும் தேவைப்பட்டால் சிகிச்சையும் பெறுவது பாதுகாப்பானது என்கிறார் மருத்துவர் நிவேதிதா

 
*******************************************************************************
கருக்குழாய் கர்ப்பம்
மாதவிலக்கு தள்ளிப்போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருக்கும், ஆனாலும் அந்தக்கர்ப்பம் ஆரோக்கியமானதா கர்ப்பப்பையில்தான் வளர்கிறதா என்பதை அந்தத்தாய் அறிய வாய்ப்பில்லை. கர்ப்பப்பையில் வளர்வதற்குப் பதில் கருக்குழாயில் வளர்ந்தால் அந்தக்கருவை காப்பாற்றமுடியாது. கவனிக்காமல்விட்டால் தாயின் உயிருக்கும் ஆபத்தாகலாம் என்கிறார் மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா. இயற்கையாக பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் சேர்ந்து கரு உருவாகிறது. இதை கருக்குழாயானது எடுத்துச்சென்று கர்ப்பப்பையினுள் வைக்கிறது. அங்கு அது வளர்கிறது. இது ஆரோக்கியமான கர்ப்பம்.


கருக்குழாயில் தொற்று இருந்தாலோ சிதைந்து போயிருந்தாலோ கருவானது கர்ப்பப்பைக்குள் நகர்த்தப்படுவது தடுக்கப்பட்டு கருக்குழாயிலேயே தங்கி வளரத்தொடங்கும். கர்ப்பப்பை மட்டுமே கருவைத்தாங்கி அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் சக்தி உடையது. மிகவும் குறுகலான கருக்குழாயினுள் கருவானது வளரமுடியாமல் 40 முதல் 70 நாட்களுக்குள் குழாயையே வெடிக்கச்செய்துவிடும். கருக்குழாயின் மிகக்குறுகிய பகுதிக்குள் வளரும்போது இந்த வெடிப்பு இன்னும் சீக்கிரம் நடக்கும். சில நேரங்களில் கருவானது குழாயிலேயே அழுகிப்போகலாம். அதுவும் தாய்க்கு ஆபத்தானது. சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டாலும் கருவானது கர்ப்பப்பையில் இருப்பதை 38 முதல் 45 நாட்களில்தான் தெரிந்துகொள்ளமுடியும். அப்படித்தெரியாவிட்டால் கருக்குழாய் கர்ப்பமாக இருக்கலாம் என சந்தேகப்படலாம். இரத்தப்பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கருக்குழாய் கர்ப்பமா என கண்டுபிடிக்கலாம். கருக்குழாயில் தங்கி வளரும் குழந்தையைக் காப்பாற்றமுடியாது. அதை வளர விடுவது தாயின் உயிருக்கே ஆபத்தானது என்பதால் ஊசி அல்லது மாத்திரை மூலம் அதை மடியச்செய்யவேண்டும். அறுவை சிகிச்சையின் மூலம் கருவை வெளியே எடுத்து கருக்குழாயை பாதுகாக்கலாம். சிலருக்கு கருக்குழாயானது அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் கருக்குழாயையும் நீக்கவேண்டி வரும். இரண்டில் ஒரு கருக்குழாயை மட்டும் நீக்குவதால் அந்தப்பெண் பயப்படத் தேவையில்லை. கர்ப்பம் தரிக்க ஒரு கருக்குழாயே போதுமானது. குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்கள் பிறகு மறுபடி குழந்தைவேண்டி வெட்டப்பட்ட குழாய்களை இணைக்கிற ரீகேனலைசேஷன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருப்பார்கள் அந்தப் பெண்களுக்கும் இப்படி கருத்தரித்து குழாயில் கரு தங்கி வளரும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார் மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா.

நன்றி தினகரன்



 *************************************************************************************

முதல் முறையாக கருத்தரிக்கும் மகளிர் தெரிந்து கொள்ள வேண்டியவை எவை?
கர்ப்ப காலத்தில், குறிப்பாக முதன்முறையாக கருத்தரித்திருப்போர், அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள், அசௌகரியங்கள் நிகழும்.
கர்ப்ப காலமான 9 மாதங்கள் முழுவதிலும் நீடிக்கக்கூடும், ஆனால் சில அசௌகரியங்கள் ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ அல்லது மூன்று மாத
காலமோ இருந்து, பின் மறைந்து விடும்.

எவ்வாறாயினும், இந்த அசௌகரியங்களை, குழந்தைக்கு பாதிப்பு உண்டாக்கக்கூடிய மருந்து மாத்திரைகளின் உதவியின்றி, ஓரளவுக்கு தாங்கிக் கொள்ளக் கூடியவாறும், எப்படியாவது இயற்கை முறையில் குறைப்பதற்கான தேவையை நன்கு உணர்வோம்.

அவ்வாறு கர்ப்ப காலத்தில் தோன்றக் கூடிய பொதுவான அசௌகரியங்களுள், வயிறு, அடிவயிறு மற்றும் கால்கள் ஆகியவற்றில் உண்டாகும் தசைப்பிடிப்புகளும் ஒன்றாகும். இந்த தசைப்பிடிப்புகளைக் கட்டுப்படுத்தவும் அவற்றை சிறிது காலத்திற்கேனும் வராமல் தடுப்பதற்கும் சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்... 

• சுடுநீர் குளியல் உடல் பாகங்களின் இயக்கத்தை சீராக்கும். ஆனால், கர்ப்பிணிகள் மிதமான சூடு இருக்கும் தண்ணீரையே உபயோகிக்க வேண்டும். மேலும், மிக நீண்ட நேரம் குளியலறையில் இருப்பதையும் தவிர்த்து, 15 முதல் 20 நிமிடங்களுக்குள் குளித்து முடித்து வெளியே வர வேண்டியது அவசியம். இந்த கர்ப்ப கால அசௌகரியத்திலிருந்து, எவ்வித அபாயங்களோ அல்லது பக்கவிளைவுகளின்றி வெளியே வர, இந்த சுடுதண்ணீர் குளியல் மிகவும் பாதுகாப்பான ஒரு வழிமுறையாக விளங்குகிறது.

• சூடு பரப்பும் பைகள் தற்போது சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்து சிறிது நேரம் அழுத்துவதன் மூலம் சரிசெய்யலாம்.

ஒருவேளை அது போன்ற சூடு பரப்பும் பைகள் இல்லையெனில், ஒரு சுத்தமான துணியை சுடுதண்ணீரில் நனைத்து, அத்துணியில் அதிகமாக இருக்கக்கூடிய நீரைப் பிழிந்து விட்டு, அதனை தசைப்பிடிப்பு உள்ள இடங்களில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

இது தற்காலிக நிவாரணம் தருவதாக இருப்பினும், உடனடியாக பலன் அளிக்கக்கூடிய ஒரு சிகிச்சை முறையாகும். முக்கியமாக இது கீழ் முதுகு போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய தசைப்பிடிப்புகளுக்கு சிறப்பான நிவாரணம் வழங்கக்கூடியதாகும்.

• பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகிய தாதுப்பொருட்கள், தசைப்பிடிப்புகளுக்கு எதிரான நற்பயன்கள் கொண்டவைகளாக நம்பப்படுகின்றன. தசைப்பிடிப்புகளை எவ்வித சிரமுமின்றி குணமாக்க, தினமும் உணவில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருள்களைக் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழைப்பழங்கள், அதிக அளவு பொட்டாசியச் சத்து உள்ளது. உடலின் கால்சியத் தேவைகளுக்கு, வஞ்சிர மீன் வகைகள், பச்சை இலைகள் நிறைந்த காய்கறிகள், பாதாம் பருப்பு, பால் பொருட்கள் மற்றும் நெத்திலி மீன் வகைகளை உணவில் நிறையச் சேர்த்துக் கொள்ளலாம்.